ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியிருந்தால் தேர்ச்சி பெற்றிருக்கலாமே என்ற மனநிலையில் உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த பதிவு. Are you among those who think, "I could have passed if I had written the teacher eligibility test"? This post is for you.
வணக்கம்!
நேற்று (30.01.2026) வெளியிடப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்தவர்கள், கடந்த முறை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியிருந்தால் தேர்ச்சி பெற்றிருக்கலாமே என்ற மனநிலையில் உள்ளவர்கள் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள் யாரும் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து மனப்பதட்டம் மற்றும் கவலை கொள்ள தேவையில்லை.
ஏனென்றால், பணியில் உள்ளவர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு என்பது மிக மிக எளிமையாக இருக்கும். பணியில் உள்ள அனைவரும் தேர்ச்சி பெறும் விதத்தில் தான் வினாத்தாள் அமையும்.
மேலும் இதற்கான மாதிரி மற்றும் பயிற்சி வினாத்தாள்கள் மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரித்து வெளியிடப்படும். இதை நன்கு தயார் செய்தாலே, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்று விட முடியும்.
பணியில் உள்ளோருக்கு அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண்கள் வழங்கவும் வாய்ப்புண்டு.
பணியில் உள்ளோரை தக்க வைக்கத் தான் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் எந்த ஒரு ஆசிரியரும் பணி இழக்கப் போவதில்லை. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உள்ளிட்ட பல மாநில அரசுகள் மற்றும் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், பணியில் உள்ளோருக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் பணியில் உள்ளோருக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
மேலும் பணியில் உள்ளோர்க்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் விதமாக, நாடாளுமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து சட்ட திருத்தம் மேற்கொள்ள ஆலோசிக்கப் பட்டு வருகிறது.
பணியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற இயலாத சூழலில், இவர்கள் அனைவருக்கும் கட்டாய ஓய்வு அளித்து, பணப்பலன்கள் வழங்குவது என்பது அரசுக்கு பெரும் சவாலாக அமையும்.
மேற்கண்ட காரணங்களால், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப் படலாம்.
அல்லது பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் எளிதாக தேர்ச்சி பெறும் வகையில் குறைந்த பட்சம் 4 முறை சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படலாம்.
ஆகவே பணியில் உள்ள ஆசிரியர்கள் யாரும், தகுதித் தேர்வில் தேர்ச்சி வாய்ப்பை இழந்து விட்டோம் என கவலை கொள்ளத் தேவையில்லை.
அதுபோல, கடந்த முறை நடைபெற்ற தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், விண்ணப்பித்து தேர்வு எழுதாத ஆசிரியர்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.
நன்றி!

No comments:
Post a Comment